அவதாரிகை :
நாம் (தேஹாத்மாபிமானிகள்)(Knowing & realization):
ஒன்பது வாயில் ஒளிமதிக் கூரைவேய்
பன்முகப் பற்றுடை இத்தேகம் -- துன்பத்
துறை கோயில் இஃதின் பிறிது உயிர்என்...
உறைப்பில் உணர்வு பழுது.
பர்வத பரமாணு ஓட்டை வாசி:
அதுஅறிந்தார் காண்முனிகள் ஞானத் துயர்வால்
பதுமத்தாள் மால்காதல் மிக்க -- மதிநலத்
தாழ்வாரின் ஒக்குமோ? மங்களத் தோங்குபெரி
யாழ்வாரின் ஆமோ அவர்?
எடுத்துக் கழிகிகத் தோதில்லை:
அப்பெரி யாழ்வாரும் தம்மகளார் ஆண்டாளுக்
கொப்போ எனப்பேசில் அன்றுகாண் -- தப்பாது
நம்மைத்தாள் சேர்த்துமாலுக் காட்படுத்தும் ஆசான்வாய்
தம்மையவள் முன்நிறுத்த லால்
ஆண்டாள் அநுகாரம் பள்ள மடை:
பிரிவும் பயலமையும் மீதூர காதல்
தரியா மடவார் திருமால் -- கருமமவை
தம்பால் ஒருவாரு ஏரிட்டு தாழ்த்தல்தாம்
தேம்பாநீர்ப் பள்ள மடை.
துய்த்தபின் நீராடல் சிற்றின்பம் மாலன்பு
துய்ப்பதாய் நாடி அவனடியார் -- மொய்ப்ப
மடந்தையர் ஆங்கவ னோடு உடன்கூடத்
தேடல் சுனையாடல் நோன்பு.
பிரபந்த தாத்பர்யம் :
பாவையர் நோன்பு பனிவிழும் காலையில்
பூவையர் கூடி இடைச்சேரி -- ஆச்சியர்
கண்ணனைக் கண்ணாளம் தான்கட்டி கால்பிடிக்க
எண்ணம் உணர்த்தாம் பொருள்.
எட்டெழுத்து தொட்டுணர்த்தும் உட்பொருள்தான் மற்றயார்க்கு
எட்டாதான் கால்பற்றி நிற்றார்கு -- கிட்டும்
படியாற்றும் கைமுதலும் காண்பயனும் நாரணனே
செய்தவேள்வி சிந்தை யராய்அவன் செய்வன
செய்து கொளாதே பதரியுதவச் -- செய்வான்
விரதமதில் வேண்டிற்றும் வேண்டாதும் கொண்டு
உறங்குவான்போல் யோகுசெய்வான் ஏத்து.
மறவாது என்றும் வாழுதியேல் வாழலாம் :
தன்அலாத தன்னதாக்கை தான்திருட்டு; மேன்உடைமை
அன்னதை யானுடையன் யான்உரியன் -- என்னுமது
பஞ்சம்; உரியஉண வாகவுண்ணா மைப்பிணி
விஞ்ச வளர்ந்தான்பேர் ஒது.
விதேயனான பர்ஜன்ய தேவதைக்கு கையோலை :
உலகம் படைத்தவன் கையடக்கம்; உன்னி
உலகம் படைக்கும் இறையோ -- குலவு
மவன்மந் திரத்து அடக்கம்; அதுவும்
உவந்தவந்த ணர்தெய்வ மாடு.
பிரம்ம ஞானப் பிரபாவம் :
இறையறிவாம் மெய்யறிவுத் தீயினுள் பாபம்
இரையாய் உருமாயும் மற்று -- அறியாப்
பிழையவையும் தாமரை தன்இலைமேல் நீர்போல்
இழையவொட்டா தேபோம் அகன்று.
அனுபவித் தேயற வேண்டுமாம் பாபம்
அனுபவி யாதவை மாயல் -- தானுமென்
என்னில் நெருப்பினை நீர்தணித்தல் போல்கருணை
முன்னால் கருமம் விலகு .
மாடுகன்று ஒன்றின்றி பாலர் களும்ஒளித்தான்
மொட்டவிழ் தாமரை மேநான்தான்; -- தேடல்வாய்
அவ்வவையாய் தானாகி மாயனே மாறல்போல்
எவ்வெவையும் தன்னுள்ளாய் தோற்று.
ஜகதுபாதான காரணம் பிரஹ்மம் :
மாடுகன்று ஒன்றின்றி பாலர் களும்ஒளித்தான்
மொட்டவிழ் தாமரை மேலயனும் -- தேடல்வாய்
அவ்வவையும் தானாகி மாயனே மாரினாப்போல்
எவ்வெவையும் தன்னுள்ளாய் தோற்று.
பாலே மருந்து :
அடிஇரண்டும் காப்பு இனிமை அடியார்
படிஎன்றால் அம்மால் அவனின் -- படியும்
அதுவே! பிடித்துச் சுவைத்து சகடம்
உதைத்து நடத்து மவன் .
அகவிதழும் புறவிதழும் :
உள்நாட்டுத் தேசு உடன்கூடி செய்அடிமை
வள்ளல்மால் வானோர்தம் நாயகர்க்கு -- உள்ளத்தே
உள்ளாம் உயிர்தன் நிறம்பெறலும் மேல்நாடாம்
கள்ள உடலைக் கரந்து .
ஸககார நிரபேக்ஷோ உபாயம் :
இராக்கதர் தின்ற உடல்காட்டி வந்து
அறிவிப்பார் தாங்களாக ஏபரமே! -- சேர
வரும்நம் வீடணற்கு இக்கரை போந்த
பரமாவா என்னும் அது.
உபாய அத்யவசாயம்:
தன்முயற்சித் தான்ஏது மின்றி அவன்கையே
தன்உயர்த்திக் காம்பழு தில்உபாய -- மென்பயிற்றுச்
சோம்பிக் கிடப்பார் உறவும் அபிமானம்
நம்பி ஒருபா டிரு.
ஸ்வகத ஸ்வீகாரம் நம்நிலை :
சேயன் எளியன் திருமா மகள்கேள்வன்
தூயவின் நாமம் பலபலவும் -- வாயின்
மொழிதல்மால் தன்னை அணைந்துகால் கட்டும்
வழியதாய் நாடல் கடை.
பரகத ஸ்வீகாரம் ஆழ்வார் நிலை :
நோன்பும் நியமும் தன்முயற்சி கோலுவார்
அன்றியருள் ஞான விளைநிலமாம் -- என்புடல்
கூடவேர் பற்று கழற்றாதார் போலாழ்வார்
நாடும்மால் அன்றோ வழி.
சித்த சாதன நிஷ்டை :
பலன்கரு தாது முயல்வார் இலையாய்
நலன்வேண்டின் நாமியற்றல் கூடும்!-- சொலப்புகில்
மாலோலன் தம்முயற்சி கோலாதார் அம்முயற்சி
தோலா வகையார் செயல்?
கருமம் கைங்கர்யத்தில் புகும் :
செயலொன்றும் நம்மால் பயன்மூன்று நீடும்;
உயப்படு நேர்பயன் போல்துணைப் -- பயன்,காணாச்
சூழப்பயன் என்றிவை கோலா கருமத்
தெழுபயன் மாலவன் தொண்டு.
யாதாத்மிய ஞான சந்தேசம் :
செயல்அறிவு பக்தி திருத்தாள் பரிவிவைமேல்
மேயகருமம் நான்கதூம் மால்தொண்டு -- தூய
உயிர்பால் மிளிர்வவன் இட்ட வழக்கென்
துயக்கித் தனைத்தான் நீடு.
அத்தாணிச் சேவகத்தில் பொதுவானது நழுவும் :
பிராட்டி ஸ்வசக்தியை விட்டாள் .
திரௌபதி லஜ்ஜையை விட்டாள் .
திருக்கண்ணமங்கை ஆண்டான் ஸ்வவியாபாரத்தை விட்டார்.
இப்படி உபாயத்துக்கு அதிகாரிகளான பிராட்டியும், திரௌபதியும், திருக்கண்ணமங்கை ஆண்டானும் போலே
உபேயத்துக்கு அதிகாரிகள் இளையபெருமாளும், பிள்ளை திருநறையூர் அறையரும் . சிந்தையந்தியும் ஆவர்.
இவர்களின் அவஸ்பேயாக்ஷிதங்கள் :
பிரியில் தரியாமை .
தன்னைப் பேணாமை .
ஏவிக் கொள்ளவும் வேணும்.
ஸது நாகவர ஸ்ரீமான்;
அந்தரிக்க்ஷ கத ஸ்ரீமான்;
லக்ஷ்மணோ லக்ஷ்மி ஸம்பன்ன:
என்றிருக்கிற உபேயத்துக்கு அதிகாரிகளின் அத்தாணி சேவகத்தில், பொதுவானது நழுவும். ஆகவே இவர்கள் ஸ்ரீமான்.
ஆற்றல்,பெண் பாலார்தம் கூச்சம், சுயத்தனம்
பற்றுப்பான் தாள்பற்றும் ஆறதில் -- நிற்றார்க்கும்;
அற்றபற்று நோற்றுப் பெறல்விழை தொண்டதூம்
மாற்றமில் சேவகத்தே வல்.
ஆற்றல் - ஸ்வசக்தி
பெண்பாலர்தம் கூச்சம் - ஸ்த்ரீத்வ தனமாகிற லஜ்ஜை
சுயத்தனம் - ஸ்வ வியாபாரம் என்றிவை
பற்றறுப்பான் தாள்பற்றி நிற்பார்க்கு - உபாயத்தில் தீக்ஷித்தவர்களுக்கு
தூற்றதாம் - நிக்ருஷ்டமாய் விடத்தக்கவை.
அற்றபற்று நோற்று - ஆகிஞ்சின்ய அநன்யகதித் வாதிகளை முன்னிட்டுக் கொண்டு வகுத்த சேஷி பக்கல் பண்ணின சரணாகதிக்கு அனந்தரபாவியான
பெறல்விழை தொண்டதூம் - பிரார்த்தித்து பெறவேண்டிய ஸகஜ தொண்டுதனை
மாற்றமில் - ஸமிக்ஞா சூசித ஆக்ஞா ரூபேண /அதவா/ அவன் புன்சிரிப்புக்கு உசிதமாய்
ஏவல் - சேஷித்தானும் தன்முகப்பே ஏவிப்
சேவகத்து - பணிகொள்ளவேண்டும் என்ற இத்தால் ''அருள்பாடிட்டு ஸ்ரீகார்யம்'' கொள்கையாகிற அவன் மதித்த கைங்கரியம் செய்யப்பெற வேண்டும் என்கிறது. அதுவும் ''இறைவா நீ தாராய் பறை'' என்பத்துக்குச் சேர அமைய வேண்டுமாகிற அனுபந்தம் இதிலே அடங்கும்.
மரணாந்தாநி வைராணி :
(பகவத் பிரவிருத்தி விரோதி ஸ்வபிரவ்ருத்தி நிவிருத்திஹி சரணாகதி).
இறந்தபின் நம்பால் அவன்செய் விரோதம்
துறந்தானாய் மாயும் அதுவால் -- உறவினன்நீ
செவ்வே கருமம்செய் வீடணா! என்பணித்த
அவ்வோ விலக்காமை காப்பு!
பாகவத ஸமிர்த்தி :
தன்னடியார் நோக்கி அருள்வான் அரங்கனார்
முன்னடி போக்கியவர் பின்நடக்கும் -- அன்பனவன்
சூழ்த்தொடையல் காணாக்கண் பாழ்த்தமுகத் துப்புண்;
தொழாக்கை யன்றுலக் கை .
பாகவத பரிபூர்த்தி :
அடியார் அவர்பழிப்பும் தம்பால் கொடையாய்
நுடியா தவைஇசைவார்க் கன்றோ? -- ''கடியார்
துளப முடியார் அடியான்'' எனுமவ்
வளப்பம் உடைத்தாய் முடிந்து.
விஷ்ணுநா வியபதேஷ்டவ்ய :
கிராம குலாத்தி பரிமாற்றம் வேண்டாதே
''இராமா நுசன்தன் அடியானென்'' -- கூறு
மொழியே உகந்து உபசரிப்பார் நாடி
வழிபடலே மாலின் உகப்பு.
குருபரம்பரையை விடுத்த த்வயாநுசந்தானமும்
தேவதாந்திர பஜனத்தொடே ஒக்கும்:
குருமார் நினைவு இறையுணர் முன்னம்;
திருவார் பரிவும் அவர்சேர் -- நெறியாய்
மறைசேர் பயன்வாய் துறைசேர் சரண்தாள்
முறையார் முயல்வார் குறித்து.
வான் இளவரசு வைகுந்தக் குட்டன் :
(போக, போக்கிய, போக்த்ருத்வம்)
ஆடரவின் சூழ்தொடையில்; புட்சிறகான் வீழ்நிழலில் ;
வீடுலகில் சேனாநி சேண்பிரம்பின் -- ஆடுவான்
வாழ்முதலாம் நம்மின் உயிர்முதலாய் விண்ணுளார்
சூழ மகிழ்முதலாம் ஆங்கு .
புருஷம் கரோதி புருஷகார :
தேவன் ஒருவன் குறியது கூறிடில்
மேவல் முடியல் இடையே -- சுவைத்தல்
வியன்பட யார்செயல் தெய்வமவன் நம்பால்
இயல்பினன் செய்வாள் திரு.
சோர சதுஷ்டயம் :
கன்னக் களவு கொளுவார் நால்வராவார்;
தன்னை உயர்த்தி படைத்தவன் -- தன்னை
அவரனாய் இன்னும் குணமிலை கீழ்மேல்
அவனதில்லை என்பார் அவர்.
அவாப்த ஸமஸ்த காமத்வம் :
இதைவிட ஈது எனவாய் மிகைப்படா
யாது முடிவோ அதுவீடு -- அத்தை
அடைய அனைத்ததன் இன்சுவை கூடா
அடைவார்க்கு காமம் முடிந்து.
பகவத் பாதோதகம் பாவநம்;
பாகவத பாதோதகம் ஸுபாவநம் :
காயசுத்தி ஆறின் வருநீறு; ஆன்மசுத்தி
பாயும் சடைச்சாறு ஆஅதன் -- மேயபால்
சாணத்தின் சாறதனின் தூயதே மாலடியார்
மாணத் திருவடி சாறு.
குணபால மத யானை :
ஈட்டிய புண்ணியம் பெற்றாலும் கிட்டுமோ?
மட்டில் பெரும்பாபம் செய்வானைக் -- கூட்டுமோ?
பட்டத்து யானை செயுமவை ஆராயும்
திட்டத்தோ? எற்றாவன் யான்?
கடக்க கிருத்யம் :
தன்வழி தானும் வருவானை நேர்படுத்தி
நம்வினை போக்கி அடிசேர்ப்பாள்; -- மன்கருணை
மாயா வகைதிரு மால்குணம் காப்பளாம்
தாயவள் தம்கருணை காப்பு.
பாரதந்திரிய, அநன்யார்ஹத்வங்கள் :
பெற்று மறந்து முடிந்து பிழைக்கலாம்
பாற்று பிராட்டி தனைராமன் -- தூற்றின்வாய்
கானகம் போக்கினும் அன்னை முடிந்திலளாய்
வானகம் வேட்டா திருப்பு.
உபாய ஸ்வபாவ ஸ்வரூபம் :
தாமரையாள் நோக்காமால் தான்கார்யம் செய்வானேல்
கோமான் இறையாண்மை கொத்தையாய் -- தமர்அது
மெச்சும்? அவள்வேட்ட ஈதல் நிறமாய் (ஸ்வபாவம்)
இச்சை உயிராம் (ஸ்வரூப) குணம்.
ஸ்தூணான் நிகனந் நியாயம் :
அன்னை அருளால் அடியான் எனவாகித்
தன்னை அடைந்தார்க்கு ஆங்களித்த -- பின்னை
பிழையது ஆகா வகையே குறையங்
கிழையா தலுங்குவார் கோல்.
குணகோடியிலாம் தோஷம் உபாதேயம் :
குவிதல் விரிதல் இலையாய மேனி
குவிதல் மலர்தல் இவைதான் -- புனைதல்
குணமோ எனபிணக் காவார் அடியார்
அணைய மகிழ்வான் திறம்.
பக்தபக்ஷபாதம் கேடல்ல மாடு :
உதங்க பிரச்னத்துக் குத்தரம் நீடா
சுதந்திரன் பத்தரவர் சார்ந்தே-- உதகலதும்
வேண்டுதல் வேண்டாமை இல்லாதான் வாழ்குணமாய்
கொண்டாடப் பாற்றக் குணம்.
மங்களாசாசனத்துக்கு பலவியாப்பத்தி அதுவே :
வாழிவாழி என்றேத்த வாய்க்குமத் தொண்டதும்
கேழில் பயனாம்; பிரிதொரு -- சாழல்
இலையாய அவ்வடிமை தானும் பணிசெய்
தலதேல் சீவியா பண்பு.
ஸ்வரூபாநுரூபமான கைங்கர்யமேலும் பிரார்த்தித்த பெற வேண்டும் :
உன்னை விடுத்தபிரி தொன்றை கொடுத்து
எம்மை விலக்காதே கொள்ளடிமை; -- நன்மை
நமக்கத்துவால் வேட்டுமது ஈட்டி உவகை
உமக்கது என்றுகொள்நாட் டே!
மாம் -அஹமின் அர்த்தம் மால் - ஆலின் இலையாலில் ஸுவியக்தம்:
கடலின் குளப்படி எற்றோ நெடியமால்
மாடுடை மாலின் மயக்கத் -- தடங்கும்
நமக்குடைக் காதல்! இடுசிவப்பு மேன்மை;
தமக்குடை அவ்எளிமை பீடு.
முக்த போகம் :
தம்மையே தாம்தமர்க்கு நல்கி வெலவருவான்
தம்பால் எதிரம்பு பூட்டாதே -- உம்மால்
இனித்தோற்றோம் என்றிருப்பார் பக்கல்தாம் தோற்பார்
நனிநல்கல் முக்தபோ கம்.
தன்னைப்போல் ஊரும் நாடும்:
இறையுள நற்குணம் குற்றமிலாப் பண்பரேனும்
யாரே குவலயத்தில் யாதும் -- குறையிலார்?
புண்ணியன் கண்ணன் நண்ணி இருப்பார்க்கு
திண்ணமனி இல்லை அவா!
தனக்கேயாய் எனைக்கொள்ளு மீதே :
அடிமைக்கண் ஆனந்தம் தன்னதன்றி தேவன்
படியாய் இளவல் இருவர் -- அடிமையும்
நீடு மிடத்துமே அத்தலைக்கு ஏற்புடைத்தாய்
நாடும் நமக்காதல் பின்பு.
தம்மை முன்னிடுவாரை தாம்முன்னிடுகை ஸ்வரூபம் :
அனுகரித்து சொன்னவை ஒன்பதோடு சேர்ந்த
பனுவல் இருபத்தும் தானாய்க் -- தனித்துப்
பணித்த நெரவலொன்றும் கோதைதன் பாவைக்
கணியாதல் ஆழ்வார்முன் னிட்டு .
பிராப்ய பிராப்பாக ஸங்கிரகம்
மார்கழித் திங்கள் மணவரைக் காட்டவே
பார்புகழ் நாரணனைக் கூடுமென -- நேர்ந்தனள்
பாவையர் நோன்பு! உரிமையும் உணர்த்துவாள்
பூவையர் கூட்டாக வையத்து!
கிருத்யாக்ருத்ய சங்கல்பம் :
வையத்து வாழ்ச்சி பரமன் அடிபாடல்!
செய்முறை யாவும் ஒழுகலோடு -- ஐயம்
விலக்கி அடியார் அவர்வை கரைநாடல்
துலங்குவார் சன்மம்சீர்த் தோங்கு!
பர சமிர்த்தி பிரயோஜனம் :
ஓங்கு பெரும்சென்நெல் எங்கும் தழைப்பவே
தேங்கு புனல்பெருகி கற்புடை -- மங்கையார்
குறித்தும் குலமன்னர் அந்தணர் என்றிவர்க்காய்
வாரிஎழ ஆழியான் வேட்டு!
விதேயனான பர்ஜன்ய தேவதைக்கு கையோலை :
ஆழிதன் ஆகத் தெழுமேக வண்ணா! நீ
ஊழியான் கைத்தலத்து ஆழிபோல் -- சூழல்
சுழித்து எமக்கு தவுமேல் வளப்பம்
தழைப்பபெய் மாயம் விடுத்து!
பிரம்ஹ ஞான பிரபாவம் :
மாயனை! மாமதுரை மன்னனை! வாயினால்
ஓயாமல் ஓதி மனம்மொழி -- தோய
நினைப்பிடுவார் பாபம்போம்! சேமம்
அனைத்துமாம்! புள்ளுவம் அன்று!
ஆஸ்ரயணத்துக்கு அர்ச்சா சௌலப்யம் என்கை :
புள்ளும் சிலம்பின! பிள்ளாய் உணர்ந்திலையோ?
வெள்ளத் தரவில் துயின்றவன் -- உள்ளம்
புகுந்து குளிர்ந்தாயால்? புள்ளரையன் கோயில்
சகத்திலாய் மற்றவன் கீச்சு!
சேஷத்வத்துக்கு இசைகை :
கீசுகீசு என்று கலந்தன கூட்டில்
நேசமுடன் புட்கள்!நம் நாயகியே! -- ஏசல்
தவிர்ந்தவெம்மை சேடப் பொருள் எனநீ
உவந்திருந்து கீழ்மை அகற்று!
பாரதந்தர்யத்தில் பர்யவசிக்கை :
கீழ்வானம் வெள்ளென்று அக்ஞானம் வீழ்தலும்
ஏழையார் வாழ்வு பகலதாய் -- சூழலினி
அடியார் அவர்பக்கல் இட்ட வழக்காய்
நடமினோ தூமுறுவல் ஏற்று!
போக்த்ருத்வம் விலக்கி போக்யதை ஆகல் :
தூமணி சேரொளி அஃதா மாமாயன் மாதவன்
தேமதுர தாட்கடிமை நேருவதும் -- காமம்
தமக்கென் னாது அவன்பொருட்டாய் ஆகி
உகப்பும் உரித்தவர்க்காய் நோற்று!
சித்த தர்ம போதனம் :
நோற்று சுவர்க்கம் புகப்பெறல் ஆற்றுவான்
எற்றுக்கோ? அம்மனாய்! செய்தவேள்வி -- நாற்றத்
துழாய்முடி நாரா யணன்நிற்க நம்மால்
சூழப் பெறாதவன் கற்று!
அனுஷ்டான ஔசித்யம் :
கற்றுக் கறவை பலகறந்து தன்கடமை
ஆற்றுவான் பொற்கொடியே! போதராய்! -- போற்றி
முகில்வண்ணன் பேர்பாட வேண்டி இரப்ப
ஆகுமோ கனையா திருப்பு?
அநனுஷ்டான கார்யகரத்வம் :
கனைத்து எருமை முலைவழியே பால்சோ
ரனைத்தில்லம் சேராகும் ! நற்செல்வன் -- தானைத்
தங்காய்! மனத்துக் கினியானைப் பாடவும்
இங்கோ உறங்குமிப் புள்?
ஸ்வயம் பாகம் கோஷ்டி பகிஷ்காரம் :
புள்ளின்வாய்க் கீண்டானை! பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானை! கீர்த்திமை -- உள்ளத்தே
உள்ளி எமைத்தள்ளல் கள்ளம்என் றல்லால்என்?
வள்ளன்மை உங்களுக்கு ஈது?
சௌந்தர்யம் ருசி ஜனகம் :
உங்கள் புழக்கடை செங்கழுநீர் வாய்நெகிழ்ப்ப,
சங்கோடு சக்கரம் ஏந்தும்நம் -- அங்கை
அழகன்!மால்! பங்கயக் கண்ணணைப் பாட
எழுவாய்!நீ! எல்லே உணர்!
ஏற்றிட்ட தோஷத்தை இல்லை என்னாது இசைகை :
எல்லே! இளம் கிளியே! எல்லாரும் போந்தார்என்
றல்லால் புகுந்தெண்ணிக் கொள் ! அல்லவை -- சொல்லுமேல்
நானேதான் ஆயிடுக! மாயனை பாடலும்
தானேநின் நாயகம் நீடு!
பாகவத சம்பந்தம் அநுகல்பம் :
நாயகனாம் நந்தகோபன் கோயில்முன் வாயில்
நேய நிலைக்கதவம் காப்போனே! -- ஆயர்
சிறுமியரோம் ஈண்டு துயிலெழப் பாடிப்
பெறுவோம்! அம்பரத் தோடு!
ஸ்தாநீகரை முன்னிடல் : :
அம்பரமே தண்ணீரே சோறே அறம்செய்யும்
எம்பெருமான் நந்தகோ பாலஆ! -- எம்பிராட்டி
அம்மே! அசோதாய்! செல்வா! பலதேவா!
உம்மால்யாம் உந்தல் கடன்!
புருஷகார பிரபத்தி :
உந்து மதகளி றன்னநம் நந்தகோபன்!
சொந்த மருமகளே! நப்பின்னாய்! -- செந்தா
மரைக்கையால் வந்து திறவாய் மகிழ்ந்து !
நிறைவிளக்கம் அஃதாம் எமக்கு!
பிராபிக்கையில், மிதுனத்துக் குண்டான த்வரை:
குத்து விளக்கு தனைக்காட்டி மற்றவை
அத்தனையும் காட்டும்! நப்பின்னை! -- குற்றம்
கணிசியாது மற்றை அருள்நடப்ப செய்வளே!
மாணியாது முபற்றும் முடித்து!
பெரிய பிராட்டியாலே பேறு என்கிறது :
முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே! உன் -- அப்பணைக்கு
ஒப்பனவே செய்தருள் நப்பின்னை எம்மோய்!
ஒப்பித்தெம் மின்ஏற்றம் செய்!
ஸ்வரூப பிர்யுக்த தாஸ்யம் :
ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிக்கும்
ஆற்றல் பெரும்பசுக்கள் முத்திறமும் -- ஆற்றப்
படைத்தான் மகனே! உமக்கடிமை எம்மின்
படியது! அங்கமல மற்று!
அநன்யார்ஹ சேஷத்வம் :
அங்கண்மா ஞாலத் தரசர் அபிமான
பங்கமாய் வந்தார் எனவந்து -- நுங்கண்
தலைப்பெய்தோம்! அங்கண் இரண்டும்
மேலைஎம் பால்மாரி போன்று!
கர்ம பாரதந்ரியம் :
மாரி மலைமுழஞ்சில் மன்னிய சிங்கம்தன்
மூரி நிமிர்த்து முழங்கி -- புறப்படுமா
போலே அடிபட இங்கனே போந்தருளி
மேலா மனைத்தும்தா ஆன்று!
மங்களாசாஸனம் :
அன்றிவ் உலகம் அளந்துநீ பெற்றனை !
உன்றன் கழல்வாழி! பல்குணத்த -- நின்திறலும்
பல்லூழி நீடுவாழி! எம்முடைச் சேவகம்
நல்கி ஒருபா டிரங்கு!
அநன்யப் பிரயோஜனர்களாக வந்தமை கூறல் :
ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஒருத்திக்
கிருத்தி! அற்றதற்றோ எம்மின் -- கருத்தும்!
திருத்தக்க செல்வமும் சேவகமும் கூட்டி
வருத்தமும் தீரமகிழ் மால்!
ஸாம்யாபத்தி மோக்ஷம் :
மாலே மணிவண்ணா! மார்கழிநீ ராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன -- ஆலின்
இலையாய் அருளென்ன மாற்றம் உனக்குடை
மேநிலை எட்டதும் கூட்டு!
சாயுஜ்யம் பலம் :
கூடாரை வேல்லும்சீர் கோவிந்தா! உன்தன்னைப்
பாடிப் பறைகொண்டு யாம்பெறும் -- ஆடை
அணியும் கூடி இருந்து குளிர்தல்
பேணினோம் நோன்புள் கரந்து !
உபாய வரணம் :
கறவைகள் பின்சென்று உண்போம் அறிவின்
புறப்பாடு இல்லாமால் உன்னைப் -- பிறவி
பெறும்தனைப் புண்ணியம் யாமுடையோம்! கோவிந்தா!
ஆறும்நீ யாதலே சித்து!
புருஷார்த்த நிர்ணயம் :
சிற்றம் சிறுகாலை வந்துன்னைச் சேவித்து
குற்றேவல் லெங்களைக் கொள்வாயால் -- உற்றோமாய்
ஆட்செய்வோம்! மற்றைநம் காமங்கள் மாற்று ! எம்
பாழ்த்தவினை வங்கத் தழுத்து !
பல வியாப்த்தி :
வங்கக் கடல்கடைந்த மாதவனால், கேசவனால்
திங்கள் திருமுகத்து சேயிழையார் -- அங்கப்
பறைகொண்ட வாற்றை அணிபுதுவை கோதை
நிறைசெய்தாள் மார்கழிஇன் புற்று!
கிடாம்பி ஸ்ரீநிவாஸ ரங்கன் ஸ்ரீநிவாச தாஸன்.
(K S Srinivasan).